Sunday, June 12, 2011

சிவசங்கரமேனன் - சுபிரமணிசாமிக்கு கண்டனம்.

பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை:

ராஜபக்சே போர்க் குற்றங்களுக்கு எதிராகவும் ஈழத் தமிழர்களைக் காப்பாற்றவும் இலங்கை மீது இந்தியா பொருளாதாரத்தடை விதிக்க வலியுறுத்தி தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றிய தீர்மானம் - தமிழக மக்களுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு மிகப்பெரும் ஆறுதலையும் நம்பிக்கையையும் தந்திருக்கிறது. இந்த தீர்மானத்தின் வழியாக தமிழர்களின் உணர்வுகளை பிரதிபலித்துள்ளார், தமிழக முதலமைச்சர்.ஆனால், தமிழக முதல்வரை தீர்மானத்துக்குப் பிறகு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன் சந்தித்து பேசிவிட்டு அதிகாரிகள் குழுவோடு கொழும்பு சென்று ராஜபக்சேயை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில் தமிழக முதல்வர் தம்மிடம் தெரிவித்த கருத்துகளையோ, ராஜபக்சேவின் மனித உரிமை மீறல்களையோ ராஜபக்சேவிடம் பேசவில்லை என்று வெளிப்படையாக பேட்டி அளித்திருப்பது, சட்டசபைத் தீர்மானத்தின் உணர்வுகளையும், முதல்வரின் கருத்துகளையும் தமிழரின் உணர்வுகளையும் அலட்சியப்படுத்தி அவமதித்துள்ளார். இதை வன்மையாக கண்டிக்கிறோம்.


தமிழக முதல்வரின் சட்டமன்றத் தீர்மானங்கள், தமிழ்நாட்டில் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில தமிழின விரோத சக்திகளை அதிர்சிக்குள்ளாக்கியிருக்கிறது. கட்சி - அணிகள் என்ற எல்லைக்கு அப்பாலும் இத் தீர்மானத்துக்காக தமிழக முதல்வரை அனைவரும் பாராட்டும் நிலையில், சுப்ரமணியசாமி போன்ற சில தனி மனிதர்கள், தமிழக முதல்வரை மிரட்டும் வகையில் உத்தரவுபோட தொடங்கியிருக்கிறார்கள். சட்டம், ஒழுங்கு, மின்வெட்டுப் பிரச்சனைகளில் மட்டும் கவனம் செலுத்துவதோடு முதல்வர் தமது கடைமையை நிறுத்திக்கொள்ளவேண்டும் என்று சுப்பிரமணியசாமி பேசுவது அவரது ஆணவத்தையே காட்டுகிறது. தமிழக முதல்வருக்கு எதிராகவும், ஒட்டு மொத்த தமிழினத்தையும் சுப்பிரமணியசாமி இப்படி ஆவணத்துடன் அவமதிப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும்.

சாட்சியம் இல்லாமல் மூன்று லட்சம் தமிழ் மக்கள் மீது இலங்கை இனப்படுகொலைகளை கட்டவிழ்த்துவிட்ட பிறகும், தமிழ்நாட்டில் மக்கள் பேராதரவோடு ஆட்சிக்கு வந்த முதல்வர் கருத்து தெரிவிக்க உரிமை இல்லை என்று, சில தனி நபர்கள் பேசுவதை, வாக்களித்த மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். ஈழத் தமிழர் உரிமைப் பிரச்சனையில் தமிழக முதல்வர் தீர்மானத்துக்கு ஆதரவாக தமிழினமே ஒருமித்து திரண்டு நிற்கிறது என்பதை எதிப்பாளர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
.

(கொளத்தூர் மணி )

தலைவர்

1 comment: